பதிவு செய்த நாள்
09
பிப்
2016
11:02
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் 140 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும், மீனாட்சி அம்மன் தீர்த்தவாரி உற்சவம், வைகை ஆற்றில் நேற்று நடந்தது. தை மாதம், அமாவாசை, திங்கள், திருவோணம் நட்சத்திரம், வியதிபாத யோகம், இவை ஐந்தும் 140 ஆண்டுக்கு ஒரு முறை தை அமாவாசையில் இணைந்து வரும் அற்புதம் நிகழ்கிறது.
இதை ’மகோதய புண்ணியகாலம்’ என்பர். இதன் அற்புத நிகழ்வான, மதுரை மீனாட்சி அம்மன் தீர்த்தவாரி உற்சவம், வைகை ஆற்றின் திருமஞ்சன தீர்த்தக்கிணற்றில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.இதற்காக விநாயகர், சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுடன் பச்சைப்பட்டு உடுத்தி சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், சுவாமி வெண் பட்டு, அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி சர்வ அலங்காரத்தில் சொக்கநாதர் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நாதஸ்வரம், மேலதாளம் முழங்க, ஒட்டகம், காளை பட்டாளங்களுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு புறப்பாடாகி தேர் முட்டி வழியாக, வைகை ஆற்றின் திருமஞ்சன தீர்த்தக்கிணற்றில் 9.30 மணிக்கு எழுந்தருளினர். சிவனடியார்கள் வலம்புரி சங்குகளில் ஓசை எழுப்பி வரவேற்றனர். திருமஞ்சன தீர்த்தக்கிணற்றை பஞ்ச மூர்த்திகள் ஒரு முறை வலம் வந்தனர். திருமஞ்சன தீர்த்தக்கிணற்றின் அலங்கார பந்தலில் ேஹாமம் வளர்க்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமியின் பிரதிநிதியாக காப்பு கட்டிய கணேசன் பட்டர், சுவாமி, அம்மன் வடிவமான திரிசூலங்களுக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் அபிஷேகம், தீபாராதனை நடத்தினர். கணேசன் பட்டர் தீர்த்தமாடி தீர்த்தவாரி உற்சவம் காலை 10.15 மணிக்கு நடந்தது. பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. உற்சவம் முடிந்து காலை 10.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மன், சொக்கர் பிரியாவிடையுடன் கோயிலுக்கு புறப்பாடாகினர்.ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர். தை மாதம், அமாவாசை, திங்கள், திருவோணம் நட்சத்திரம், வியதிபாத யோகம், இவை ஐந்தும் 140 ஆண்டுக்கு ஒரு முறை தை அமாவாசையில் இணைந்து வரும் அற்புதம் நிகழ்கிறது.