பதிவு செய்த நாள்
09
பிப்
2016
11:02
வத்திராயிருப்பு :சதுரகிரி மலையில் தை அமாவாசை விழா நேற்று கோலாகலமாக நடந்த நிலையில் ,இதை காண தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்தனர்.
இங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமி கோயில்களில் இந்தாண்டு விழா பிப்.,6 ல் சனிப்பிரதோஷ வழிபாட்டுடன் தொடங்கியது. அன்று இரவு முதல் மறுநாள் (பிப்.,7 )வரை சிவராத்திரி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை பூஜை நேற்று அதிகாலை துவங்கியது.
சங்கொலி: சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு காலையில் 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து சங்கொலி முழங்க பாரம்பரிய சிவவழிபாடு , அமாவாசை பூஜை நடந்தது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரம், சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி ராஜஅலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேர்த்திக்கடன்மாலையில் மீண்டும் சங்கொலி முழங்க சித்தர்கள் வழிபாடு நடந்தது. இத்துடன் மலையில் உள்ள பலாஅடி கருப்பசாமி கோயிலிலும் அடிவாரமான தாணிப்பாறை கருப்பசாமி கோயிலிலும் அமாவாசை பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமிதரிசனம் செய்தனர். அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மலையில் மொட்டைஎடுத்து , கோழி உட்பட ஜீவராசிகளை செலுத்தி வழிபட்டனர். போலீசார் ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் குருஜோதி, நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த நிலையில், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. உயர்த்தப்பட்ட சேவைக்கட்டணம்* சதுரகிரி மலை செல்லும் பக்தர்களிடம் வனத்துறை சார்பில் சேவைக்கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. தை அமாவாசை விழாவிற்காக கட்டணம் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.
* வனத்துறையினர் மலைக்கு செல்லும் ஒரு பக்தர்களைக்கூட விடாமல் அடிவாரத்திலேயே சோதனையிட்டு, தடைசெய்யப்பட்ட பீடி, பான்பராக், பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் மலைப் பாதையில் கடை வைத்திருந்தவர்கள் அதை சர்வ சாதாரணமாக விற்பனை செய்தனர்.
* மலையில் சேகரமாகும் குப்பையை அகற்றி பசுமையை பாதுகாக்கும் நோக்கில்தான் பக்தர்களிடம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மலையிலும், அடிவாரத்திலும் பக்தர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக்கழிவுகள் அகற்றப்படாமல் விழா நாட்கள் முழுவதும் சுகாதாரக்கேடான நிலையில் இருந்தது.
* போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வாகன போக்குவரத்து ஒருவழிப்பாதையாக்கப்பட்டது. மலைக்கு செல்லும் வாகனங்கள் வத்திராயிருப்பு பாதை வழியாகவும், திரும்பிய வாகனங்கள் மகாராஜபுரம் வழிபாதையில் திருப்பி விடப்பட்டன.