பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
10:06
மயிலாடுதுறை: திருநாங்கூரில், 300 ஆண்டுகளுக்கு பின், பன்னிரு ரிஷபாரூட காட்சி திருவிழா நடந்தது.நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருநாங்கூர் கிராமத்தை சுற்றி, பாடல் பெற்ற, பழமை வாய்ந்த, 12 சிவாலயங்கள் அமைந்துள்ளன.
திருநாங்கூரில், மதங்க மகரிஷியின் மகளாக மாதங்கினி என்ற பெயரில் அம்மன் பிறந்ததாகவும், அவரை இறைவன் திருமணம் புரிந்து, மதங்க மகரிஷிக்கு, பன்னிரு மூர்த்திகளும் திருமண கோலத்தில், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்ததாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வைபவத்தை நினைவுகூரும் வகையில், 12 சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள், திருநாங்கூரில் எழுந்தருளி, திருமண கோலத்தில், ரிஷபாரூடராக காட்சி அளிக்கும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.காலப்போக்கில், இத்திருவிழா நின்று போனது. 300 ஆண்டுகளுக்குப் பின், திருக்கல்யாணம் மற்றும் ரிஷபாரூட காட்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு, 12 திருத்தலங்களில் இருந்தும் சுவாமிகள், திருநாங்கூர் நம்புவார்கன்யர் கோவிலில் எழுந்தருளினர். அங்கு பன்னிரு மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் திருக்கல்யாணம் நடந்தது.