பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
12:07
கோவை :ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.கோவை நகரில் மத்தியில், காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கோனியம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை முதல் இரவு வரை, தொடர்ந்து பூஜைகள் நடந்தன. அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, அபிஷேகம் ஆராதனை நடந்தது. பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள, மகாலட்சுமி மந்திரில், துர்க்கை அம்மன், மகாலட்சுமி அம்மன், சரஸ்வதி தெய்வங்கள் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள, பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு பால், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதேபோல், சுந்தராபுரம், சாரதாமில் ரோடு முத்துமாரியம்மன் கோவில், பீளமேடு, சேரன்மாநகர், மகாலட்சுமி கோவில், நல்லாம்பாளையத்தில் உள்ள பொங்காளியம்மன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விளாங்குறிச்சி ரோடு, வெங்கடாசலபதி நகரிலுள்ள, கற்பக விநாயகர், கருமாரியம்மன் கோவிலில், ஸ்ரீ வாராஹி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேரன்மாநகரில் உள்ள, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதால், அனைத்து கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.