பழநி: ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில், பெங்களூரு பக்தர்கள் மலர்க்காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த 30 ஆண்டுகளாக மலர்க்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நேற்று காலை காவடிகள் எடுத்து வந்தனர்.இதேபோல பால்குடம், தீர்த்தக்காவடி எடுத்தும் படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பொதுதரிசன வழியில் 3மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமி மயில் வாகனத்திலும், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை வெள்ளி மயில் வாகனத்திலும் திரு உலா வந்தனர்.