பதிவு செய்த நாள்
25
ஆக
2016
11:08
திருப்பதி; திருமலை ஏழுமலையான் கோவில் எதிரே, டாலர் விற்பனை மையத்தை, தேவஸ்தானம் அமைத்து வருகிறது. திருமலையில், லட்டு வழங்கும் மையத்தில், ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி டாலர்கள் விற்கப்படுகின்றன. தற்போது, டாலர் விற்பனைக்காக, ஏழுமலையான் கோவில் எதிரேயுள்ள, புத்தக விற்பனையகம் அருகே புதிதாக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு, செப்பு, வெள்ளி, தங்க டாலர்கள் விற்கப்பட உள்ளன. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவஸ்தானம் தனிவரிசை ஏற்படுத்தி உள்ளது. தினமும் காலை, 10:00 மணி; பிற்பகல், 3:00 மணி என, இருமுறை அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தாங்களாகவே சென்று, ஏழுமலையானை தரிசிக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை, தேவஸ்தான ஊழியர்கள் அழைத்து செல்வர். தரிசனம் முடிந்ததும், அவர்களை அழைத்து வந்து கோவில் வாசலில் விடுவர். அவ்வாறு, கோவில் முன் வாசலில் கொண்டு விடப்படும் பக்தர்கள், அங்கிருந்து தாங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். கோவில் வாசலில் நிழற்பந்தல் இல்லாததால், வெயிலில் சிரமப்படுகின்றனர். அதனால், கோவில் வாசலில் இருந்து, பிரதான சாலை வரை செல்ல, பாட்டரி கார்களை இயக்கும்படி, தேவஸ்தானத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.