பதிவு செய்த நாள்
27
ஆக
2016
11:08
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜரின் திருமேனி திருமஞ்சன தீர்த்தம் சரும நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதால் தீர்த்தம் வாங்க விஷேச நாட்களில் பலர் வருகின்றனர் என, பக்தர்கள் கூறுகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் அவதரித்த ஊர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே அவரது திருமேனி உருவாக்கப்பட்டது. இந்த திருமேனி தானுகந்த திருமேனி என, அழைக்கப்படுகிறது.இது, ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல நுாறு வருடங்களாக சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.மாதந்தோறும் திருவாதிரை திருநட்சத்திரத்தன்றும், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் திருநட்சத்திரத்தன்றும், சித்திரை அவதாரத் திருநாட்கள் பத்து நாட்கள் உள்ளிட்ட ஆண்டின் மிக விசேஷமான நாட்களில், ராமானுஜருக்கு, திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் ராமானுஜரின் திருமேனி முன் அவருடைய வடிவழகு கட்டியம், திருமஞ்ஜனம் கட்டியம் ஆகியவை ஓதப்படுகின்றன.
இதையடுத்து, பசும்பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் போன்ற திரவியப் பொருட்களால் ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். அப்போது ராமானுஜர் திருமஞ்சனம் கண்டருளிய பின் அவருடைய திவ்ய திருமேனியின் மீது பட்ட திருமஞ்சன தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். மேலும், மற்ற எந்த கோவிலும் காணமுடியாத ஒரு சிறப்பை இந்த கோவிலில் காணலாம். ராமானுஜர் திருமேனியில் சாற்றப்படும், காஷாயம் எனப் போற்றப் படும் மிகவும் புனிதமான வஸ்திரம் (ஆடை), ஸ்ரீ ராமானுஜர் திருமஞ்சனத்தின் போது அவர் திருமேனியில் சாற்றப்படும். அந்த வஸ்திரத்தை களைத்து, ஈரவாடை தீர்த்தம் எனப் போற்றப்படும் அவர் திருமேனியின் தீர்த்தத்தை, அவருடைய வஸ்திரத்தை பிழிந்தே, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த வைபவம், எந்த கோவிலி லும் காண முடியாத அபூர்வ நிகழ்வு. அவ்வாறு பெறப்படும் தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதால் பல விதமான சரும நோய்களும், தோஷங்களும் விலகுவதாக நம்பப்படுகிறது. எனவே, மாதந்தோறும் நடைபெறும் திருவாதிரை திருமஞ்ஜனத்தின் போது நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைகின்றனர்.இந்த ஆண்டு, ஆவணி மாதம் திருவாதிரை திருநட்சத்திர திருமஞ்சனம், நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.