பகவான் கண்ணன் பிறந்த மதுராவிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் ஓடுகிறது யமுனா நதி. அதன் மீது கட்டப்பட்ட பாலத்தைக் கடந்து சென்றால் கண்ணன் வாழ்ந்த கோகுலத்திற்குச் செல்லலாம். கோகுலம் ஒரு சிறிய ஊர். இங்குள்ள கோயிலில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் கண்ணபிரான் அருள்புரிகிறார். இந்தக் கோயிலில் தனிச் சன்னிதியில் பகவான் கிருஷ்ணனுடன் பாமா-ருக்மணியும் காட்சி தருகிறார்கள். இக்கோயிலுக்குள் நுழைந்தாலே பக்திப் பரவசத்தில் பக்தர்கள் ஆழ்ந்து பஜன்பாடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
மகாகவி சூர்தாஸ் என்பவர் வல்லபா ஆச்சாரியாரின் மாணவர். இவர் பிறவியிலேயே பார்வையற்றவர். அவர் கோகுலத்தில் அருள்புரியும் பகவான் கண்ணனின் பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அங்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். கண்ணனை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும், பகவான் கண்ணன் தன்னைப் பார்ப்பான் என முழு நம்பிக்கையில் தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களை வற்புறுத்தினார். அவர்களும், கண்ணனின் பக்தனான அவரை அந்தக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பகவான் கிருஷ்ணன் விக்கிரகத்தின் முன் நிறுத்தினார்கள். கிருஷ்ணன் முன் நின்ற சூர்தாஸ் கவிபாட ஆரம்பித்தார். தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தார். வெளியே பலத்த மழை, இடி, மின்னல் அப்பொழுது ஒரு தெய்வீக ஒளி அவரைப் பிடித்துத் தள்ளியது. சூர்தாஸ், எதிரேயிருந்த கண்ணன் விக்கிரகத்தின் மீது விழுந்தார். கண்ணனின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். அடுத்த விநாடி, அவருக்குப் பார்வைக் கிட்டியது. கண்ணனை முழுவதுமாக தரிசித்து, மேலும்மேலும் பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்.