பதிவு செய்த நாள்
17
செப்
2016
11:09
திருப்போரூர்: வருமானம் அதிகரித்து வரும் கந்தசுவாமி கோவில் நிர்வாக அந்தஸ்து, செயல் அலுவலர் நிலையிலிருந்து, உதவி ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீடுகளுக்கு நிகரான, மிகவும் பழமையான கோவில் என்பதால், இக்கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கோவில் உண்டியல் காணிக்கை, முடி ஏலம், பிரசாதக்கடை ஏலம், நிரந்தர கட்டடங்கள் வாடகை, விவசாய நிலம் குத்தகை, திருமணம் மற்றும் அர்ச்சனை சீட்டு விற்பனை போன்ற வகைகளில், ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது.கோவில் நிர்வாகம் தற்போது சிறப்பு நிலை செயல் அலுவலர் அந்தஸ்தில் உள்ளது. மேலாளர், கணக்கர், தட்டச்சர்,
துப்புரவு பணியாளர்கள், ஓதுவார்கள், காவலர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். ஊழியர்கள் பல ஆண்டு களாக பணி புரிந்தும், ஊதிய நிலை குறைவாகவே இருந்து வருகிறது. மேலும், நிர்வாக பணிகளை கவனிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தும் நியமிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, கோவில் நிர்வாகத்தை உதவி ஆணையர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்த வேண்டுமென, திருப்போரூர் சமூக ஆர்வலர்களும், பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.