பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
கும்மிடிப்பூண்டி: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலின் குளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி அம்பிகை சமேத பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தெற்கு பகுதியில், பரந்து விரிந்த குளம் ஒன்று உள்ளது. நோய் தீர்க்கும் அமிர்த தீர்த்தம் என, ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் அந்த குளம், முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது; குளத்தை சுற்றியுள்ள பகுதியில், குடியிருப்புகளின் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குளத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உள்ள புதர்களை அகற்றி, நான்கு பக்கமும் குளத்தை சுற்றி வர வழி ஏற்படுத்தி, தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகமும், இந்து அறநிலைய துறையும் இணைந்து செயல்பட்டு, ஆன்மிகம் வளர்த்த கோவில் குளத்தை காக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.