சபரிமலை: சபரிமலையில் சுத்திகலச பூஜைகள் நிறைவு பெற்றது. இன்று அதிகாலை அஷ்டபந்தனம் நடைபெற்றது. நாளை (21ம் தேதி) இரவு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலையில் திறந்தது. 17-ம் தேதி காலையில் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று காலை எட்டு மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து சகஸ்ரகலசம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.
12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் விக்ரகம் மற்றும் மாளிகைப்புறம் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்றும், நேற்று முன்தினமும் தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் தலைமையில் சுத்திகலச பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளுக்கு பின்னர் கோயிலை சுற்றி தந்திரி ராஜீவரரு புண்ணிய நீர் தெளித்தார். இன்று அதிகாலை 4:40 மணிக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் அஷ்டபந்தனம் நடைபெறும். அதன் பின்னர் பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் கிடையாது. நாளை இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.
முதல்வர் ஜெ.,க்கு சிறப்பு வழிபாடு: திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டி, சபரிமலையில் கணபதிஹோமம், மிருத்யுஞ்சய அர்ச்னை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.