பதிவு செய்த நாள்
24
அக்
2016
11:10
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் திருப்பணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பக்தர்களைக் கவர்ந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் புகழ் பெற்ற குடவரைக் கோயிலாகும். நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் கடந்த பிப்.,முதல் திருப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் காண உள்ள இக்கோவிலில் தற்போதைய திருப்பணியில் பிரகார,மண்டபக் கூரைகளில் வரையப்பட்டுள்ள பஞ்சவர்ண ஒவியங்கள் பக்தர்களை கவர்ந்துள்ளன. கிழக்கு கோபுரத்தில் உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் வேதவியாசருக்கு மகாபாரதம் எழுதுவது, சூரியன் ஆண்டின் 12 மாதங்களில் ராசிகளில் சஞ்சரிப்பது, மூலவர் சன்னதிக்கு முன்பாக 12 ராசிக் கட்டங்கள், திருக்கயிலாய திருமணக் காட்சி, பிரகாரத்தில் சிவபார்வதி,மகா லெட்சுமி, ரிஷப வாகனத்தில் எழுந்தருளியுள்ள பார்வதி பரமேஸ்வரன், கோ பூஜை உட் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், நடராஜர், சரஸ்வதி, அம்மன் சன்னதி முன்பாக சுழலும் லிங்கம் என்று ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.
சுழலும் லிங்கம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் நேராகவே இருக்கும். 360 கோணத்தில் சுழலும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. அதே போன்று மகாபாரதம் எழுதும் விநாயகர் எங்கிருந்து பார்த்தாலும் பார்ப்பவரை நோக்கியே காணப்படுவார். திருப்பணிக் குறித்து கோவில் அறங்காவலர்கள் காரைக்குடி மு.தண்ணீர்மலை செட்டியார், பூலாங்குறிச்சி வ.ராமநாதன் செட்டியார் கூறுகையில், திருப்பணி முடியும் தருவாயில் உள்ளது. கூரைகளில் புதிதாக பல வண்ண ஓவியங்கள் வரையப்படுகிறது. வாகனங்கள் அனைத்தும் பைபர் கவசத்தால் மூடப்பட்டு, பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் பல பணிகள் நடந்துள்ளன. கும்பாபிஷேக நாள் அரசு அனுமதியுடன் விரைவில் முடிவாகும். அதனையடுத்து யாகசாலைக்கான பணிகள் துவங்கப்படும், என்றார்.