சிலரது வீட்டுக்குப் போனால், “வாங்க..உட்காருங்க...காபி சாப்பிடுங்க! சாப்பிட ஏதாவது செய்யட்டுமா? மட்டன் தயாரா இருக்கு. ஒரு நிமிஷத்திலே சப்பாத்தி ரெடி பண்ணிடுவேன்,” என்று உபசரிப்பு பலமாக இருக்கும். ஒருவர் தினமும் வீட்டுக்கு வந்தாலும் கூட இதே முகமலர்ச்சியுடன் உபசரிப்பார்கள். சில வீடுகளுக்கு போனால், சமையலறையில் பெரிய திரையை போட்டுக் கொண்டு, அந்த வீட்டு அம்மையார் வெளியே வரவே மாட்டார். வீட்டுத்தலைவரோ, உலக விஷயமெல்லாம் பேசுவார். ஆனால், ஒரு டீ கூட தரமாட்டார். இப்படி நம்மை ஒருவர் உபசரிக்கவில்லை என்பதற்காக, அதே நபர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் உபசரிக்காமல் இருந்து விடக்கூடாது. நபிகள் நாயகத்திடம் அவரது தோழரின் தந்தை ஒருவர், “நாயகமே! நான் ஒருவரது வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை உபசரிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கு வந்தால், நானும் பதிலடியாக உபசரியாமல் இருந்து விடலாமா?” என்றார். அதற்கு நாயகம், “அப்படி செய்யக்கூடாது. நீங்கள் எந்த நிலையிலும் அவருக்கு விருந்து உபசரிப்பு செய்தே தீர வேண்டும்,” என்றார். உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவுரவியுங்கள். முடிந்தளவுக்கு உபசரியுங்கள். முக மலர்ச்சியுடன் பேசுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான்.