பதிவு செய்த நாள்
17
ஜன
2017
11:01
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, லட்சக்கணக்கானோர் குவிந்தனர். தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை, மூன்று நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில், பொங்கல், மாட்டு பொங்கல், ஜல்லிக்கட்டு என, கொண்டாட்டங்கள் களை கட்டும். நகரங்களில், பொங்கல் பண்டிகையின் இறுதி நாளை, காணும் பொங்கல் என, கொண்டாடி மகிழ்வர்.
சென்னையில் நேற்று, காணும் பொங்கல், மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையை ஒட்டி உள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, லட்சக்கணக்கானோர், குடும்பத்தாருடன், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் என, நகரின் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர்.மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலையில் இருந்து, கலங்கரை விளக்கம் வரை, எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டன. அவர்கள், குழந்தைகள், முதியவர்களுடன் ஆடி, பாடி குதுாகலித்தனர். பெற்றோரின் முதுகில், குழந்தைகள் சவாரி செய்தனர். பெண்கள், ஒருவரை ஒருவர், ஓடி பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். முதியவர்கள், குழந்தைகள் போலவே மாறி, பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற காட்சிகளால், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்கள், நேற்று, உற்சாகத்தின் ஊற்றாகவே மாறி இருந்தது.
போலீசார் கண்காணிப்பு : மெரினா, எலியட்ஸ் கடற்கரை மற்றும் வி.ஜி.பி., போன்ற தனியார் கேளிக்கை பூங்காக்களில், பாதுகாப்புக்கு, 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கடலில் குளிப்பதை தடுக்க, கடற்கரை ஓரம், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. திருட்டு போன்ற சம்பவங்களை முறியடிக்க, போலீசார், உயர் கோபுரங்கள் மூலமும், பைனாக்குலர் கருவி மூலமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கூட்டத்தில் காணாமல் போவதை தடுக்க, குழந்தைகள் கைகளில், அடையாள அட்டைகளை போலீசார் கட்டி விட்டனர். பொதுமக்களுக்கு உதவ, காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
ஜெ.,க்கு அஞ்சலி : காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு, மெரினா கடற்கரைக்கு வருவோர், எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை போன்ற தலைவர்கள் சமாதியில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று, மெரினா கடற்கரைக்கு வந்தவர்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பலர், கண்ணீர் விட்டபடி, அம்மா என கதறி அழுதனர்.
151 குழந்தைகள் மீட்பு : காணும் பொங்கல் கொண்டாட, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேற்று, மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், கூட்ட நெரிசலில் காணாமல் போயினர். இதில், நேற்று மாலை, 6:30 மணி வரை, 151 குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். - நமது நிருபர் -