பதிவு செய்த நாள்
28
பிப்
2017
11:02
ஊத்துக்கோட்டை: அமாவாசை தினத்தையொட்டி, பெரியாயி அம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டை - பெரிய பாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது, எல்லம்பேட்டை கிராமம். இங்கு பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அம்மன், 20 அடி நீளத்தில் படுத்த நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களில், இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம், அமாவாசை தினத்தையொட்டி, பெரியாயி அம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மீண்டும் அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், அங்குள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம் எடுத்துக் கொண்டு விநாயகர், முருகர், பெரியபாளையத்தம்மன் உள்ளிட்ட, 9 கோவில்களை சுற்றி வந்து, பெரியாயி அம்மன் கோவிலை அடைந்தது. அங்கு கிராம மக்கள் அம்மனுக்கு முன் படையல் போட்டு வழிபட்டனர். பின், அந்த படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.