திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவில், பிரம்மோற்சவ விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம், தீமிதி விழா நடந்தது. திரவுபதியம்மன் சமேத அர்ச்சுணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 7 ஊர்களில்‚ வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு‚ சுவாமி கோவிலை அடைந்தவுடன், தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது, அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளி, பக்தர்கள் வடம்பிடிக்க, முக்கிய வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. கரகம் தீக்குண்டத்தில் இறங்க, தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.