சபரிமலை பங்குனி மாத பூஜை நிறைவு: மார்ச் 30ல் மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2017 10:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இனி உற்சவ பூஜைகளுக்காக 30-ம் மாலை திறக்கப்படும் சன்னிதானத்தில் ஏப்.10 காலை தவிர 18 வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 14ம்தேதி மாலை 5:00 மணிக்கு திறந்தது. 15 முதல் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும், சகஸ்ரகலசம், படிபூஜை, களபாபிஷேகம் போன்ற பூஜைகளும் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற பூஜைக்கு பின்னர் நேற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
அடுத்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடைதிறக்கும். அன்று பூஜைகள் எதுவும் கிடையாது. 31 முதல் ஏப்., 9 வரை வழக்கமான பூஜைகளும், உற்சவ பலி உள்ளிட்ட திருவிழா பூஜைகளும் நடைபெறும். தற்போது புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கொடியேற்று மற்றும் ஆராட்டு கிடையாது. உற்சவ பூஜைகள் முடிந்து ஏப்., 9 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஏப்.10ம் தேதி காலை மட்டும் நடை அடைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் மாலை 5:00 மணிக்கு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும். 11ம்தேதி காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். சித்திரை விஷூ 14ம் தேதி நடைபெறும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.