பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
12:04
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், ஆண்கள் மட்டும் தீ மிதிக்கின்றனர். கடந்த மாதம், 29ல், பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கம்பம் நடப்பட்டு தினந்தோறும் கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வேப்பிலை வைத்து வணங்கினர். நேற்று முன்தினம், பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் கொண்டு வந்தனர். ஒரு குடத்தில் உள்ள புனித நீரை உடைத்த தேங்காயில் ஊற்றி, துணியால் திரி அமைத்து விளக்கு பற்ற வைத்து எரிய விட்டனர். இது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.
குண்டம் திருவிழா: அன்றிரவு, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விறகுகளைக் கொண்டு, 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டது. ஆண்கள் மட்டும் ஐந்து நாட்கள் கோவில் வளாகத்தில் விரதம் இருந்து, தலையில் பூ சுற்றி, உடலில் சந்தனம் திருநீறு பூசி கையில் பிரம்பு ஏந்தி, நேற்று காலை குண்டம் இறங்கினர். பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அந்தியூர், தவுட்டுப்பாளையம், பருவாச்சி, பவானி, சந்தியபாளையம், பிரம்மதேசம் உள்ளபட சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.