பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
12:04
நாமகிரிப்பேட்டை: ஆர்.புதுப்பட்டி திருவிழாவில் தேருக்கு பின்புறம் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் கோவில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த மாதம் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 9ல் சீராப்பள்ளியில் இருந்து சுவாமி புதுப்பட்டி வந்தடைந்தது. அன்றிரவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்றைய தினம் அன்னவாகனத்திலும், 10ல் சிம்மவாகனத்திலும், 11ல் குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை தேரோட்டம் துவங்கியது. ராசிபுரம், குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி, மது விலக்கு கூடுதல் எஸ்.பி., செந்தில்குமார் உள்ளிட்ட பலர் தேர்வடம் பிடித்தனர். தேர் கிளம்பும்போது சக்கரத்தில் பக்தர்கள் தேங்காய் உடைத்தனர். பின், அதன் பின்னால் பக்தர்கள் உருளுதண்டம் போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிறிது நேரத்தில் வீடுகளுக்கு முன் கொட்டியிருந்த மண் சாலையில் தேர் சக்கரம் மாட்டிக்கொண்டது. ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தேர் வழித்தடத்திற்கு கொண்டுவரப்பட்டது. பண்டிகை முடிந்து சுவாமி மீண்டும் சீராப்பள்ளி செல்லும்போது வடுகம், மலையாம்பட்டி, குச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களிலும் பண்டிகை முடிந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் மின்னக்கல்லை சேர்ந்த வேலு என்பவர், வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, மின்னக்கல்லில் இருந்து சிறிய தேரை முதுகில் அலகாக குத்தி, 30 கி.மீ., தொலைவில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் சன்னதிக்கு இழுத்து வந்தார்.