கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2).. எதிர்பார்ப்பு நிறைவேறும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2017 04:05
கடமையில் கண்ணாக திகழும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் மீனத்தில் இருக்கும் சுக்கிரன் மே 31ல் மேஷத்திற்கு மாறி நற்பலன் தருவார். கேது, சனியால் மாதம் முழுவதும் நன்மை அதிகரிக்கும். புதன் மே 27 வரையும், ஜூன் 13 க்கு பிறகும் நற்பலன் உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் தடைகள் குறுக்கிட்டாலும், அவரது 5,7,9ம் பார்வை பலன்கள் சாதகமாக இருக்கிறது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். மாத முற்பகுதியில் பிள்ளைகளின் செயல்பாட்டால் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவீர்கள். மே 28ல் இருந்து ஜூன் 12 வரை கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
அதன் பிறகு தம்பதியர் இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஜூன் 7,8ல் அவர்களால் நன்மை கிடைக்கும். ஜூன் 2,3ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மே 17,18, ஜூன் 14ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
சூரியனால் சமூகத்தில் மதிப்பு எதிர்பார்த்தபடி கிடைக்காது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. மே 26க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிக்கும். செவ்வாயால் பெண்கள் வகையில் இருந்த தொல்லை மே 30க்கு பிறகு அடியோடு மறையும். அதன்பின் அந்த பெண்களே தவறை உணர்ந்து உதவி செய்ய முன்வருவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மே 19,20 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஜூன் 1,2,5,6,7ல் முயற்சியில் சிறு தடைகள் குறுக்கிடலாம்.
பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மாதத்தின் மத்தியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஜூன் 12க்கு பிறகு விடுபடுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். மே 27,28,29ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். முக்கிய கோரிக்கைகளை அப்போது கேட்பது நல்லது. கலைஞர்களுக்கு கடந்த மாதம் இருந்த பிற்போக்கான நிலை மாறும். மே 30க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெற்று மகிழ்வர். பணப்புழக்கத்திற்கும் குறைவிருக்காது. மே 16,17,18 ஜூன் 13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். ஜூன் 12க்கு பிறகு தீய சகவாசத்திற்கு விடை கொடுத்து விலகுவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வண்ணம் நிறைவேற சில மாதம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்ந்து, ஆடம்பர பொருள் வாங்குவர். ஜூன் 8,9 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பண உதவி கிடைக்கும். மே 21,22 நாட்கள் சிறப்பானதாக அமையும். மே 26க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. ஜூன் 12ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
பரிகாரம்: * வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை * ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு * தினமும் காலையில் சூரிய தரிசனம்
நல்ல நாள்: மே 19, 20, 21, 22, 27, 28, 29,30, 31, ஜூன் 3, 4, 8, 9 கவன நாள்: மே 23,24 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: சிவப்பு, கருப்பு
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »