பதிவு செய்த நாள்
14
நவ
2011
10:11
நாமக்கல்: நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர்த்திருவிழா, நவம்பர் 20ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல்-திருச்சி சாலை, போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நவம்பர் 20ம் தேதி, கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு, அன்பு இல்ல இயக்குனர் அருட்தந்தை எட்வர்டு சேவியர் தலைமையில், கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். இன்று (நவ., 14) முதல் 19ம் தேதி வரை, தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், மறையுரை நிகழ்ச்சி நடக்கிறது. அருட்தந்தை இன்னாசி அமல்ராஜ், ஜான் கென்னடி, தியோடர் செல்வராஜ், செல்வம், பிரான்சிஸ் சேவியர், கிறிஸ்துராஜ் ஆகியோர் பங்கேற்று, மறையுரையாற்றுகின்றனர். நவம்பர் 20ம் தேதி, காலை 8.30 மணிக்கு, செந்தாரப்பட்டி பங்குதந்தை விக்டர் சுந்தரராஜ் தலைமையில் திருநாள் பெருவிழா, கூட்டுத்பாடற்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு, கொல்லிமலை பங்குதந்தை இம்மானுவேல் தலைமையில், கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அதை தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு, ஆர்.புதுப்பாளையம் பங்குதந்தை புஷ்பநாதன் தலைமையில், கிறிஸ்து அரசர் ஆரம்பர தேர் பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் கிறிஸ்து அரசர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.