ஓரிடத்தில் அன்னதானம் கொடுக்கப்பட்டால், இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இன்ன காரணத்துக்காக தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும் போதுமானது. யார் கொடுக்கிறார்கள் என்பது தேவையற்றது. பைபிளில், “நீயோ தர்மம் செய்யும் போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது, என்று ஒரு வசனம் இருக்கிறது. இதைக் கடைபிடிப்பவரின் தர்மமே ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்படும். சூரியன் ஒளி தருகிறது. மரங்கள் ருசியான கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உப்பு உணவோடு கலந்து ருசியைத் தருகிறது. மெழுகுவர்த்தி ஒளி தருகிறது. இவையெல்லாம் தங்களையே தியாகம் செய்து, மக்களுக்கு உதவுகின்றன. இவையெல்லாம் தங்கள் சேவையை வெளிக்காட்டுவதில்லை. இவற்றையெல்லாம், கடவுள் படைத்ததற்கு காரணமே, ஆரவாரமின்றி தர்மம் செய்ய வேண்டும் என்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காகத் தான்.