பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
11:06
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கண்டிப்பாக மருத்துவச் சான்று அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த, முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை, இம்மாதம், 29ல் துவங்க உள்ளது. இந்த யாத்திரையில் பங்கேற்று, குகைக் கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், அதற்காக முன் கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். ஆபத்து நிறைந்த மலைப் பாதையில் சென்று, மலை உச்சியில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இந்த யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.தவிர, அமர்நாத் யாத்திரை வாரியத்தின் சார்பில், பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்நிலையில், பக்தர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்த ஆண்டு முதல், 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர், அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க அனுமதி கிடையாது என, அமர்நாத் யாத்திரை வாரியம் தெரிவித்துஉள்ளது.அதே போல், அமர்நாத் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் பக்தர்கள், தங்கள் உடல் நலன் குறித்த தகுதிச் சான்றிதழை இணைக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நலன் குறித்த தகுதிச் சான்றளிக்கும் டாக்டர்களின் பட்டியல், அமர்நாத் யாத்திரை வாரியத்தின் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.