பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
12:06
காட்டுமன்னார்கோவில்: கோவில் குளத்தில் வண்டல் மண் எடுக்க தோண்டியபோது, நடராஜர் சிலை உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. வழக்கம்போல், பொக் லைன் மூலம் வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, பூமிக்கடியில் சேதமடைந்த நிலையில், 4 அடி உயரமுள்ள, பீடத்துடன் கூடிய நடராஜர் சிலை, 3 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, 3 அடி உயரமுள்ள இரண்டு அம்மன் சிலைகள் என, மொத்தம், ௪ ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, கிராம தலைவர் வாசு முருகையன் கொடுத்த தகவலின் பேரில், தாசில்தார் ஜெயந்தி, டி.எஸ்.பி., ஜோஷ் தங்கையா மற்றும் போலீசார், சிலைகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிலை கிடைத்த தகவல் அறிந்ததும், எடையார், பிள்ளையார்தாங்கல், காட்டுமன்னார்கோவில், தெற்கிருப்பு, ராஜேந்திரசோழகன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிலைகளை வணங்கிச் செல்கின்றனர்.