பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
முனிவர்கள் சூழ்ந்து வர, அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்த அகஸ்தியரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள் இடும்பனும் இடும்பியும். கண்களில் கருணை பொங்க அகஸ்தியர் பார்த்தார். அதையே, அனுமதியாகக் கொண்ட இடும்பன், பேசத் தொடங்கினான்.
ஸ்வாமி! சூரபத்மனுக்குப் போர்க் கலையைக் கற்றுக் கொடுத்த பாவி நான், என் பெயர் இடும்பன். சூரபத்மன் செய்த அவ்வளவு. தீமைகளுக்கும், அவனுக்குப் போர்க் கலையில் குருவாக இருக்கும் நான் தான் காரணம். அது தீர வேண்டும். என் பாவம் தீர, தங்கள் திருவடிகளைச் சரணடைந்திருக்கும் அடியேனுக்குத் தாங்கள்தான் நல்வழி காட்ட வேண்டும் என மனமுருகி வேண்டினான்.
இடும்பன் வார்த்தைகளைக் கேட்ட அகஸ்தியர், ஒரு விநாடி கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு, கண்களைத் திறந்தார். என்னவாகுமோ என்று பதற்றத்திலிருந்த இடும்பன் கைகளைக் குவித்தபடி, அகஸ்தியர் சொல்வதைக் கேட்கத் தாயரானான்.
இடும்பா! பூர்ச்ச வனத்தில் இரு மலைகளை வைத்துவிட்டு வந்திருக்கிறேன். நீ போய் அவற்றை இங்கு கொண்டு வா என்ற அகஸ்தியர், பூர்ச்சவனத்துக்குப் போகும் வழியையும் கூறினார். (இந்த இடத்தில் ஆங்காங்கே வழியில் உள்ள திருத்தலங்களையும் அவற்றில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைப் பற்றியும் அகஸ்தியர் விரிவாகக் கூறியிருக்கிறார்.)
அகஸ்தியரை, இடும்பன் தன் மனைவி இடும்பியுடன் சேர்ந்து வணங்கி விட்டு, அவர் சொன்னபடியே பூர்ச்ச வனத்தை அடைந்தான். அங்கே, ஏராளமான முனிவர்கள், அகஸ்தியரால் சொல்லப்பட்ட மலைகளான சிவகிரி- சக்திகிரி எனும் இரண்டையும் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் இடும்பனுக்கு மெய்சிலிர்த்தது.
அகஸ்தியரின் அருளாசியால்தான், நமக்கு இந்த அற்புதத் தரிசனம் கிடைத்திருக்கிறது இடும்பி! நாமும் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் போலிருக்கிறது என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, வாசமிக்க மலர்களால் இரு மலைகளையும் வழிபாடு செய்தான்.
அதை முடித்து, அங்கேயே ஒரு பக்கமாக அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினான். கூடவே இருந்த இடும்பி, கணவருக்கான பணிவிடைகளை மனமுவந்து செய்தாள்.
ஒரு வருடகாலத் தவம் முடிந்ததும், க்ஷீபன் எனும் பிரம்ம தண்டம் அங்கு வந்தது. அஷ்ட நாகங்களான வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பவை கயிறுகளாக வந்தன. அவற்றைக் கண்டு வியந்த இடும்பன் எழுந்து, கைகளைக் குவித்து வணங்கினான். கயிறுகளான அஷ்ட நாகங்களைக் கொண்டு உறி போலச் செய்து, அவற்றில் சிவகிரி -சக்திகிரி எனும் இரு மலைகளையும் பிணைத்தான். பிரம்ம தண்டத்தை நடுவில் கொடுத்து, கால்களை வளைத்துக் குனிந்து தூக்கினான். மலைகளை காவடியாய்ச் சுமந்து வந்த இடும்பன், காவிரியைத் தாண்டியதும் அவனுக்கு வழி தெரியவில்லை. அப்போது இடுப்பில் கறுப்பு வண்ணப் பட்டை திருவடிகளில் பாதுகைகள் - வீரக் கழல்கள், அம்பு வில், வேல் ஆகியவற்றைத் தாங்கி அரச கோலத்தோடு இடும்பன் எதிரில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.
அவரை யாரோ வேடுவன் என நினைத்த இடும்பன், தான் வழி தெரியாமல் தவிப்பதை அவரிடம் சொல்ல, இப்படியே போ! வராக மலை வரும். அதைத் தாண்டினால், அகஸ்தியர் சொன்ன இடம் வரும் எனக் கூறி வழிகாட்டினார். முருகப் பெருமான். அவரை வணங்கி நன்றி சொல்லி விட்டு புறப்பட்ட இடும்பன், வராக மலைக்கு வடக்கேயுள்ள திருவாவினன்குடியை அடைந்தான். தாங்க முடியாத களைப்பும் பசியும் தாகமும் அவனை வாட்ட, மலைகள் இரண்டையும் கீழே வைத்தான். உண்டு ஒய்வெடுத்த பின், மறுபடியும் மலைகளைத் தூக்க முயன்றபோது, இடும்பனால் அம்மலைகளைத் தூக்க முடியவில்லை. என்ன முயன்றும் பலனில்லை.
மனம் வருந்திய இடும்பன், தான் கொணர்ந்த இரு மலைகளில் ஒன்றான சிவகிரியின் மீது ஏறி, நான்கு பக்கங்களிலும் பார்வையை ஓட விட்டான். அங்கே ஓரிடத்தில் முருகப்பெருமான் ஒரு சிறுவன் வடிவில் இருந்தார். விவரம் தெரியாத இடும்பன், சிறுவா! உன்னால்தான் இப்படி ஆனதா! இவ்வளவு நேரம் சுமந்து வந்த மலைகளை இப்போது சுமக்க முடியவில்லை என்று வாதாடிப் போரில் ஈடுபட்டான். விளைவு? இடும்பன் இறந்து விழுந்தான். மலைகளைக் கயிறாகச் சுற்றியிருந்த அஷ்ட நாகங்களும் பிரம்ம தண்டமும் விலகிப்போய், அகஸ்தியரிடம் நடந்ததைச் சொல்லி, தங்கள் இருப்பிடத்தை அடைந்தன. கணவர் உயிர் நீங்கியதைப் பார்த்து, தானும் புலம்பி உயிர்விடத் தீர்மானித்தாள் இடும்பி. அப்போது முருகப்பெருமான் அங்கே எழுந்தருள. இடும்பி மெய்சிலிர்த்துப் போய் முருகப் பெருமானைத் துதித்தாள். அதில், சைவ ஆகமங்களின் தெளிவுப் பொருளாக இருப்பவரே! எம்மைத் தடுத்தாட் கொள்ள வந்தீரோ என்று துதித்தாள்.
அவள் துதித்த இப்பகுதியை பழனி ஸ்தல புராண உரையில் நா. கதிரைவேற்பிள்ளை விரிவாகக் குறிப்பிடுகிறார். அதில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். காமிகம் - இரு திருவடிகள்; சிந்தயம் -திருவடி விரல்களாக; அசிதம் - முழங்கால்களாக; அஞ்சுமான். முதுகு: ஆக்கினேயம் - திருக்கண்கள்; விமலம் - திருக்கரங்கள்; பாரமேசுவரம் - மாலை; வாதுளம்- நைவேத்தியம் என இவ்வாறு ஆகமங்களெல்லாம் இறைவனின் திருமேனியில் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன என்பதை அழகாகச் சொல்கிறது அந்நூல்.
ஆகமத் தெளிவுப் பொருளாக ஆறுமுகனைத் தரிசித்துத் துதித்த இடும்பியை அதன்பின் முருகப்பெருமான் வருந்த விடுவாரா? இடும்பன் உயிருடன் எழுந்தான். முருகன் வாக்குப்படி, இடும்பன் காவல் தெய்வமாக இருக்க, முருகன் இடும்பனுக்குத் தரிசனம் தந்து அருள் புரிந்ததுதான்