பதிவு செய்த நாள்
11
ஆக
2017
03:08
மதுரை: ஆடி கடைசி வெள்ளி, மகாசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
கோவை செல்வபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை லாலி ரோடு பெரிய மாரியம்மன், கோவை ராயப்பபுரம் தண்டுமாரியம்மன், உடுமலை தளி ரோடு காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மகாசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து மாவட்ட கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.