திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 03:08
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் நான்காவது படைவீடாக திகழும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைகோவிலாக திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது. வாணிகமலாம்பிகை சமேத சுவேத விநாயகர்(வெள்ளை விநாயகர்), பெரியநாயகி சமேத சடைமுடிநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது. இக்கோயிலில் விநாயக சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால்,மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து வரும் 27 ம்தேதி வரை காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 25ம்தேதி காலை 7மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 10 மணிக்கு தேரில் வாணி கமலாம்பிகையோடு சுவேத விநாயகர் திருத்தேரில் எழுந்தருளியவுடன் திருத்தேரோட்டம் சன்னதி வீதியில் தொடங்கி நான்கு வீதியிலும் நடைபெற உள்ளது. அன்று மாலை மூஷிக வாகனத்தில் வீதிவுலாவும் நடைபெற உள்ளது. 26ம்தேதி காலை அரசலாற்றில் தீர்த்தவாரியும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.