கோவை: நாடு முழுவதும் வரும், 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் சிலைகள் வைக்கப்படவுள்ள இடங்கள், எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போலீஸ் அனுமதியில்லாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக்க கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. ஊர்வலத்தை அனுமதித்த நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர பகுதிகளில் கடந்தாண்டு, 378 விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். நடப்பாண்டும் இதே எண்ணிக்கையில் சிலைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, பல்வேறு இடங்களில் இருந்து பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் கோவை கொண்டு வரப்பட்டுள்ளன. செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்ய சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விநாயகர் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று சிலைகள் வைக்கப்பட உள்ள இடத்திலும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.