ராஜபாளையம்: ராஜபாளையம் மாப்பிள்ளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி நண்பர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ராஜயோக கணபதி, படகு ஓட்டும் கணபதி மற்றும் முருகன், மண்வெட்டியோடு விவசாயத்திற்கு செல்லும் முண்டாசு கட்டிய காட்சி, மாட்டு வண்டி, குதிரை வண்டி ஓட்டி வரும் கணபதி சிலைகளை தத்ரூபமாக செய்து வழிபாட்டிற்கு காட்சிபடுத்தி உள்ளனர். கோயில் அமைந்துள்ள ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள பகுதி முழுவதும் பந்தல் போடப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆக. 20 ல் ஆரம்பித்த விழாவில் முதல் நாள் மதுரை ஆதினம் விழாவினை துவக்கி வைத்து பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். அன்று மாலை உலக நன்மைக்காக மோகன சுந்தரம் சுவாமிகளின் மகா யாகம் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு சத்யசாய் பஜனை நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு குஜராத் பெண்கள் தாண்டியா நடனம் மற்றும் கோலாட்டம் நடத்தினர். விழாவின் 6ம் நாளான 25 காலை 5:00 மணிக்கு யாக வேள்வி ,மாலை 6 மணிக்கு விழா திடலில் விநாயகர் சிலை ஊர்வலம் துவங்க நகர் முக்கிய வீதிகள் வழியாக ஐ.என்.டி.யு.சி., நகர் எதிர்புறம் உள்ள கண்மாயில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர். ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்துள்ளார்.