சபரிமலையில் 5,000 பேருக்கு அன்னதானம் : தேவசம்போர்டு திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2017 10:08
சபரிமலை: சபரிமலையில் வரும் சீசனில், ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், அன்னதான மண்டபம் விரிவாக்கம் செய்யும் பணியை தேவசம்போர்டு செய்து வருகிறது. சபரிமலையில் தற்போது தனியார் அமைப்புகள் அன்னதானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐயப்பா சேவா சங்கத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவசம்போர்டு மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த சீசனில் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் இரண்டாயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து, உணவு சாப்பிடும் வகையில் புதிய அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. எனினும் கூட்டம் அதிகமாகும் நேரத்தில், பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இந்த மண்டபத்துடன், அதன் பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தையும் இணைத்து ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேர் அமரும் வகையில் அன்னதான மண்டபம் புனரமைக்கப்படுகிறது. இதற்காக ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சன்னிதானத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மீடியா சென்டர் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீடியா சென்டர் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட வசதியாக பாண்டிதாவளத்தில் தர்ஷன் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் ஐந்து மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில், இரண்டு பிளாக்குளை முடித்து முதற்கட்டமாக மீடியா சென்டர் மற்றும் அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்படுகிறது. இதற்காக 9.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.50 கோடி ரூபாய் செலவில் பெரிய நடைப்பந்தல் சீரமைக்கப்பட்டு வருகிறது. சன்னிதான வடக்கு வாசலில் கருங்கல் பதிக்கப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் டேங்க் கட்டப்படுகிறது. இதற்காக 5.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசு சார்பில், அரசு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளையும் நவ.16-ம் தேதிக்கு முன்னர் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த ஆண்டுக்கான மண்டல சீசன் தொடங்குகிறது.