பதிவு செய்த நாள்
24
ஆக
2017
11:08
செந்துறை, செந்துறை பகுதியில் 45 ஆண்டுகளுக்கு பிறகு 18 கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் முத்தாலம்மன் விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. செந்துறை அருகே உள்ள முடிமலை ஆண்டவர், நான்கு முத்தாலம்மன், கழுவடியான், கருப்பசாமி ஆகிய சுவாமிகளின் ஆண்டு உற்சவம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. ஒரு தலைமுறைக்குப் பிறகு தற்போது விழா கொண்டாடப்பட உள்ளது. இப்பகுதியில் உள்ள திருநுாத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைக்கவுண்டன்பட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, செந்துறை, செ.புதுார், மாமரத்துப்பட்டி, பெரியூர்பட்டி, பந்திபொம்மிநாயக்கனுார், மல்லநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, பாலமலையான்பட்டி, குப்பாண்டி கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த விழாவை நடத்துகின்றனர். இதற்காக நேற்று இப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். தொடர்ந்து பிடிமண் எடுத்துச் செல்லப்பட்டது. வருகிற செப்., 6, 7ம் தேதிகளில் பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏற்றம் செப்., 8 அன்று நடக்கிறது. ஏற்பாடுகளை சரவணன், ராஜ்குமார், ராமு, ராமசாமி, ராஜபாண்டியன் செய்து வருகின்றனர்.