பரமக்குடியில் வறண்ட வைகை: விநாயகருக்கு வண்டித்தண்ணீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2017 01:08
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டுள்ள சூழலில் விநாயகர் சிலைகளை கரைக்க பள்ளம் அமைக்கப்பட்டு வண்டித் தண்ணீரை பீய்ச்சியடித்து கரைத்தனர். பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 24 ம் ஆண்டு சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இதில் நகர் முழுவதும் 38 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 3 அடி முதல் 15 அடி வரையான சிலைகள் கலந்து கொண்டன. இவை அனைத்தும் முக்கியவீதிகள் வழியாக வலம் வந்து பெருமாள் கோயில் வைகை ஆற்று படித்துறையில் கரைப்பது வழக்கம்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மணல் இருந்ததால் ஆற்றில் பள்ளம் அமைத்து அதில் ஊறிய நீரில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன. காலப்போக்கில் மணல் கொள்ளைக்கு மத்தியில், வறட்சியின் காரணமாக 15 அடி வரை ஆற்றில் பள்ளம் அமைத்தாலும் நீர் ஊற்று வருவதில்லை. இதனால் சில ஆண்டுகளாக வாடகை வாகனங்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை விநாயகர் மீது பீய்ச்சி அடித்து கரைக்க முயற்சிக்கின்றனர். இதே போல் மணல் கொள்ளை, வறண்ட வானிலை நீடிக்கும் பட்சம் வண்டித் தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதுடன், பொதுமக்கள், சமூக அமைப்பும் இணைந்து ஆறு மற்றும் கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு மழைப்பொழிவிற்கு இயற்கையான சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கு முழு முயற்சி மேற்கொண்டு வைகை துாய்மையை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.