பதிவு செய்த நாள்
14
செப்
2017
12:09
பவானி: பவானி கூடுதுறையில், காவிரி புஷ்கர நாளான நேற்று, ஆந்திர மாநில பக்தர்கள் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம், கூடுதுறை இரட்டை விநாயகர் படித்துறையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என, பல பெயர் பெற்றுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், காவிரி புஷ்கர திருவிழா கடந்த, 12 துவங்கி, 24 வரை காவிரி நீர் பாய்ந்து செல்லும் பல இடங்களில், சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. நேற்று காலை ஆந்திர மாநிலம், ?ஹதராபாத், குண்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, இரண்டு மினி பஸ்களில் வந்திருந்த, 52 பேர் காயத்திரி லிங்கேஸ்வரர் பரிகார மண்டபத்தில், தங்களின் குடும்பத்தில் இறந்த முன்னோருக்கு, திதி, தர்ப்பணம் சடங்குகளை செய்தனர். பின்னர், காவிரி ஆற்றில் புனித நீராடி, சங்கமேஸ்வர சுவாமியை வழிபட்டு சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: காவிரி புஷ்கர புண்ணிய காலத்தில், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி செய்வதால், சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என ஐதீகம். எனவே, நாங்கள் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து பரிகாரம் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.