அம்பாளின் ரதத்துக்குசக்ர ராஜரதம் என்று பெயர். அவள் பல அசுரர்களுடன் போரிட்டு ஜெயித்திருக்கிறாள். பண்டாசுரனுடன் அவள் போரிட்டு ஜெயித்ததே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு போருக்கு கிளம்பும் நேரத்தில் கேயசக்ர ரதம், கிரி சக்ரரதம் ஆகியவை கூட வரும். கேய சக்ர ரதத்தில் அம்பாளின் அமைச்சரான மந்திரிணியும், கிரிசக்ர ரதத்தில் சேனாதிபதியான தண்டநாதாயினியும் வருவர். அம்பாளிடம் இருந்து தப்பிக்க பண்டாசுரன், விக்ன யந்திரத்தை ஏவி விட்டான். தேவி அந்த யந்திரத்தை நோக்கி புன்னகை செய்தாள். அப்புன்னகையில் விக்னத்தைப் போக்கும் விநாயகர் தோன்றி விக்னயந்திரத்தை அழித்தார். பின் அசுரன், அம்பாள் மீது அஸ்திர மழையைப் பொழிந்தான். தேவி பாசுபதாஸ்திரத்தை மட்டும் ஏவி அவற்றை அழித்து வெற்றி வாகை சூடினாள்.