பதிவு செய்த நாள்
03
டிச
2011
03:12
சென்னை: ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பாரம்பரிய கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 4.62 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில், பாரம்பரியமிக்க கோவில்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியை, தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அம்மா மண்டபத்திலிருந்து அரங்கநாதர் கோவில் வரை, சாலை ஓரத்தில் மேற்கூரை அமைக்க ஒரு கோடி ரூபாயும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு ஓய்வறை, பொருட்கள் வைப்பறை போன்ற வசதிகளுக்காக 45 லட்ச ரூபாயும், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா அருகில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிப்பறைகள் அமைக்க, ரூ.25 லட்ச மும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு 56 லட்ச ரூபாயும், விருதுநகர் மாவட்டம் பகவான் ரமண மகரிஷி அவதரித்த புண்ணியத் தலமான, திருச்சூழியில் உள்ள பகவான் ரமண மகரிஷி இல்லத்திற்கு 50 லட்ச ரூபாயும், இருக்கன்குடி மற்றும் திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு 40 லட்ச ரூபாயும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு 43.6 லட்ச ரூபாயும், நெல்லை மாவட்டம் ஆயக்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு ரூ.25 லட்ச மும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா கோவிலுக்கு 44 லட்ச ரூபாய் என, பாரம்பரிய கோவில்களுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, மொத்தம் 4 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கழிமுகத்துவாரத்திற்கு அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த, 34 லட்ச ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.