பதிவு செய்த நாள்
25
செப்
2017
12:09
செஞ்சி: செஞ்சி அருகே, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், தலைவர் ராஜாதேசிங்கம், செயலாளர் முனுசாமி உள்ளிட்ட குழுவினர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, பாலப்பட்டு கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள பலராமன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பாறையில், தமிழ் கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர் லெனின் கூறியதாவது: பத்து வரிகளை கொண்ட இந்த கல்வெட்டில் சில வரிகள் சிதிலமடைந்துள்ளன. இந்த கல்வெட்டில், விவசுவாச வருடம் ஐப்பசி மாதம், விற்பட்டு கிராமத்தை சேர்ந்த கொருக கொண்டம நாயக்கர் என்பவர் நூறு குழி நிலத்தை குடை மானியமாகவும், வேலுாரை சேர்ந்த முத்தி நாயக்க குமரன் பெத்த நாயக்கன் 50 குழி நிலத்தை தலையாரி மானியமாகவும், கொடுத்ததை பதிவு செய்துள்ளனர்.
இந்த மானியத்திற்கு யாரேனும் கெடுதல் செய்தால், கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள். இந்த தானத்தை சூரியனும், சந்திரனும் உள்ளவரை அனுபவித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள குறுநில மன்னர்கள் கி.பி.,17ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த கல்வெட்டு 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது. இவ்வாறு ஆய்வாளர் லெனின் தெரிவித்தார்.