பதிவு செய்த நாள்
11
அக்
2017
01:10
மோகனூர்: புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா, தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. மோகனூர், புதுத்தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய, அர்ச்சிப்பு பெருவிழா மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. கடந்த, 8ல், புனிதரின் புதிய கொடிகம்பம் மந்திரிப்பு, கொடியேற்றம், திருப்பலி, பாதிரியார் செல்வம் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, பங்குத் தந்தை பிரகாசம் தலைமையில், வணக்கநாள் திருப்பலி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், புனிதரின் புதிய ஆலயம் அர்ச்சிப்பு, புதுநன்மை திருவிழா திருப்பலி கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, அன்பின் பொது விருந்து, பொங்கல் மந்திரிப்பு நடந்தது. இரவு, புனித செபஸ்தியாரின் மின் விளக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி, மாலை அணிவித்து புனிதரிடம் ஆசி பெற்றனர். ஏற்பாடுகளை, கோவில்பிள்ளை ஆரோக்கியராஜ், கட்டட குழு தலைவர் தாவீது, துணை தலைவர் சிமோன் ஜெயராஜ் உள்ளிட்டோர் செய்தனர்.