பதிவு செய்த நாள்
20
அக்
2017
11:10
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று நடந்த கேதார கவுரி நோன்பு விழாவில், திரளான பெண்கள், அதிரசம், வடை, பழங்கள் வைத்து அம்மனை வழிபட்டனர். தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலி பெண்கள் கேதார கவுரி நோன்பு (விரதம்) அனுஷ்டிப்பது வழக்கம்.
21 நாள் விரதம்: மகா கவுரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற, 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கவுரி நோன்பு என்ற அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று, தீபாவளி மறுநாள் என்பதால், திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், கவுரி நோன்பு விழா நடந்தது. இதில், உற்சவர் கவுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தட்டில், 21 வெத்தலை, 21 பாக்கு, 21 அதிரசம், 21 வடை மற்றும் பழங்கள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். சில பெண்கள், புதிய சேலைகள், வளையல் மற்றும் பூ குங்குமம் வைத்து சுமங்கலி பூஜை நடத்தினர். காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பெண்கள் வந்து கவுரி நோன்பு விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். நேற்று, கவுரி நோன்பு கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, நோன்பு கயிறு, பூ,பழம், தேங்காய் போன்ற பூஜை பொருட்கள் வாங்க, ஆயிரக்கணக்கானோர் திருத்தணி மார்க்கெட்டிற்கு வந்தனர்.
இருமடங்கு: அங்கு, நோன்பு கயிறு ஒன்றுக்கு, 3 ரூபாய் முதல், 10 ரூபாய் வரையும், கவுரி விரத பொருட்கள் செட், 75 ரூபாய்க்கும், ஒரு டஜன் வாழைபழம், 50 - 75 ரூபாய் வரை விற்பனையானது. இது தவிர, பழங்கள் விலையும், இரு மடங்காக விற்பனை செய்யப்பட்டது. தேங்காய், குறைந்தபட்சம், 30 ரூபாயும், அதிகபட்சமாக, 60 ரூபாயாகவும், நேற்று, விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி பூ ஒரு முழம், 30 - 45 ரூபாய் வரையும் விற்பனையானது. குறிப்பாக, நோன்புக்கு வைத்து வழிபடும் அதிரசம், ஒன்றின் விலை, 59 ரூபாயாக விற்கப்பட்டது. இதே போல், ஒரு வாழை இலை, 5 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.