பதிவு செய்த நாள்
23
அக்
2017
11:10
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தரின மக்கள், மண்ணை முக்கிய தெய்வமாக வழிபடுகின்றனர்.இதனை வெளிப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் மண்ணை வழிபடுவதற்காக, குலதெய்வ விழா நடத்துகின்றனர். விழாவின்போது, ஊரில் உள்ள பெண்கள் அனைவரும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணை தலைச்சுமையாக கொண்டு வந்து, அதில், பானை செய்கின்றனர். அந்த பானையில் பால் காய்ச்சி, பொங்கல் சமைத்து, குல தெய்வத்துக்கு படைத்து, தாங்களும் உண்கின்றனர். தங்கள் குடும்பத்து சிறுவர், சிறுமியருக்கும் இந்த வழிபாட்டு முறைகளை கற்றுத்தருகின்றனர்.
மண்ணை வழிபட்டால் மட்டுமே, நம் தலை முறைகள் நிலைக்கும் என்ற படிப்பினையை, கோத்தர்களின் வழிபாடு உலகுக்கு உணர்த்துகிறது என்பது இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.கோத்தரினத்தை சேர்ந்த பெள்ளன் கூறுகையில், “நம் வாழ்வில் எல்லாமே மண்தான். மண் இல்லை எனில், நம் உயிர் இல்லை என்பது எல்லாருக்கும் பொதுவானதாகும். அதில், மண்ணை கொண்டு உருவாக்கப்படும் பானை என்பதும், எங்கள் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை வழிப்படத்தான், ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாட்களில், எங்கள் குலதெய்வ பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அந்த நாளில், எங்கள் மக்களின் பாரம்பரிய நடனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்,” என்றார்.
மண் ஆபரணங்கள்: கோத்தர் இனத்தவர், களி மண்ணால் ஆபரணங்களை தயாரித்து, அதில் தங்களை அழகுபடுத்தி கொள்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த ஆபரணங்களில் கிடைக்கும் மன திருப்தி வைர, வைடூரிய ஆபரணங்களில் கூட கிடைக்காது என் கின்றனர்.தாங்கள் தயாரிக்கும் ஆபரணங்களை தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர். கோத்தர் இன பெண்கள் கூறுகையில், நாங்கள் கல்வி பயின்று எந்த நிலைக்கு வந்தாலும், கலாசாரத்தை மறக்க மாட்டோம்; இதில், களிமண்ணால் செய்யப்படும் ஆபரண பொருட்களை,நாங்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்றனர்.