பதிவு செய்த நாள்
23
அக்
2017
10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, ஆகம முறைப்படி புதிய கிணறு தோண்ட அக்.,28ல் பூமி பூஜை நடக்க உள்ளது. தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, தரிசனம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி பக்தர்கள் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட ஏராமான பக்தர்கள் வருவர். விழா, விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி சிரமப்படுகின்றனர்.இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 1 முதல் 6 தீர்த்த (மகாலட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் தீர்த்தங்கள்) கிணறுகளை மூடுகின்றனர். இதனால் 22 தீர்த்தத்தையும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பூமி பூஜை : செப்.17ல் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், 1 முதல் 6 தீர்த்தத்தை ஆகம முறைப்படி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது. இதற்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள், இந்து அறநிலைதுறை ஆணையரும் அனுமதி அளித்தனர்.அதன்படி அக்.,28 ல் கோயில் 2ம் பிரகார வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்து புதிய தீர்த்த கிணறுகள் தோண்ட கோயில் ஆகம முறைப்படி பூமி பூஜை நடக்க உள்ளது.