பதிவு செய்த நாள்
17
நவ
2017
05:11
தேனி: தேனியில் இருந்து, சபரிமலை செல்லும் வாகனங்கள் குமுளி வழியாகவும், தரிசனம் முடிந்து தமிழகம் திரும்பும் வாகனங்கள், கம்ப மெட்டு வழியாக வருவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணிவர். அதன் தொடர்ச்சியாக, ஏராளமானோர் அங்கு செல்வர். ஆண்டுதோறும், தேனி மாவட்ட போலீஸ் சார்பில், இரு மாநில எல்லைப் பகுதிகளை கண்காணித்து, சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். கேரளா செல்லும் வாகனங்களுக்கு சபரிமலை செல்வதற்கான வரைபடமும் வழங்கி, வழிகாட்டிகளாக உதவும் மையங்களும் முக்கிய இடங்களில் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் சபரிமலைக்கு வாகனங்கள் தேனியில் இருந்து கம்பம், கம்பமெட்டு, கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக சென்றன. சபரிமலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் முண்டக்கயம், குட்டிக்கானம், வண்டிப் பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனிக்கு வந்தடைந்தன. இதனால் குமுளி, வண்டிப்பெரியாறு மற்றும் கட்டப்பனை பகுதியில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இதை கருதி, கடந்த ஆண்டு வரை இருந்த நடைமுறை தலைகீழாக மாற்றப்படுகிறது. சபரிமலை செல்லும் வாகனங்களை குமுளி வழியாகவும், அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் கம்ப மெட்டு வழியாகவும் வரும் வகையில், ஒருவழிப்பாதையாக மாற்ற, இருமாநில போலீசாரும், விரைவில் பேச்சில் ஈடுபட உள்ளனர்.