பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரரர் கோவிலில், நாளை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் வலம் வரும் மஹா ரதத்திற்கு, கலசம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், நாளை, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர், தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர் வீதி உலா வரும், பத்து டன் எடை கொண்ட, 63 அடி உயரமுள்ள மஹாரதத்தை, மூன்று டன் எடை கொண்ட ராட்சத இரும்பு சங்கிலியால் ஆன வடத்தை பக்தர்கள் இழுத்துச் சென்று, மாட வீதியில் உலா வந்து, நேர்த்தி கடன் செலுத்தி வழிபடுவர். இந்த மஹா ரதத்தின் உச்சியில் கலசம் பொருத்தப்பட்டு, தோரணம் மற்றும் குதிரை பொம்மைகள் ஆகியவை கட்டி அலங்கரிக்கப்படும் பணி நேற்று நடந்தது. மேலும், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்லும் அம்மன் தேர் வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்படும் பணி நடந்து வருகிறது.