பதிவு செய்த நாள்
30
நவ
2017
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று மஹா தேரோட்டம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், ஏழாம் நாளான நேற்று, மஹா தேரோட்டம் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதியில் உலா வந்தனர். இதையடுத்து, 63 அடி உயர மஹா தேரில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சுவாமியை வண்ண மலர்களால் அலங்கரித்து, மதியம், 2:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, வீதி உலா துவங்கியது. இதில் ஆண்கள் இடது பக்கமும், பெண்கள் வலது பக்கமும், இரும்பு சங்கிலி வடத்தை பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர். அப்போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
ஆன்லைனில் இன்று டிக்கெட் விற்பனை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், மஹா தீபத்தை காண, முதல் முறையாக, ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, என, அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. அந்த நேரத்தில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் தங்க கொடி மரம் எதிரில் அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மலை உச்சியில் மஹா தீபத்தை கண்டு ரசிப்பார். இந்த அரிய தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டி போடுவர்.
கோவில் வளாகத்தில், 7,000 பேர் மட்டுமே அமரக்கூடிய இட வசதி உள்ளதால், அமைச்சர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 2,000 போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதில் சாதாரண பக்தர்கள் அனுமதிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்ததால், பரணி மற்றும் மஹா தீபம் காண, 500 ரூபாய் கட்டண தரிசனத்தில், 1,000 பேரும், 600 ரூபாய் கட்டண தரிசனத்தில், 100 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த டிக்கெட்டை, கடந்த சில ஆண்டுகளாக, கோவில் ஊழியர்கள், ெவளியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த தால், பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த ஆண்டு, ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய, கலெக்டர், கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து, அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் ராமசந்திரன் நிருபர் களிடம் கூறியதாவது: தீப திருவிழாவுக்கான டிக்கெட், ஆன் லைன் மூலம், இன்று காலை, 6:00 மணிக்கு துவக்க உள்ளது. ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவில், ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். www.tntemple.org மற்றும் www.arunachaleswarar temple.tnhrce.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு ரயில்கள் : திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சென்னை, சென்ட்ரலில் இருந்து, திருவண்ணாமலைக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை, சென்ட்ரலில் இருந்து, டிச., 2, காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு, மாலை, 3:30 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து, டிச., 2 இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:40 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதில், 10 முன்பதிவு செய்யப்படாத, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைத்து, இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா சாலை, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலுார் கன்டோன்மென்ட், கனியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரம் நிலையங்களில், நின்று செல்லும்.