கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதி கோவிந்தா என்பது உட்பட 16 திருநாமங்கள் சொல்லி கண்ணனை அழைத்தாள். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானை ஆதிமூலமே என்று கதறியது. அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த கலியுகத்திலும், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. கலைநுட்பம் மிக்கவரால் ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. அதுபோல் கடவுள் எங்கும் றைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி சிவன், ராமர், கிருஷ்ணர், சக்தி என்ற பெயர் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.