பதிவு செய்த நாள்
13
டிச
2017
11:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம், நான்காவது செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு வண்ணமலர்கள் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜையும் நடந்தது.அப்போது திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மீண்டும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், திருத்தணி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், கார்த்திகை மாத, 4ம் செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, பொங்கல் வைத்து, மூலவர் அம்மனை வழிபட்டனர்.