கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், ஆண்டு முழுவதும் பாதுகாக்கும் பொருட்டு சந்தனம் பூசுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
டிச., 24 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 2018 ஜன., 1 புத்தாண்டு தினத்தன்று காலை 9:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகதநடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டும். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.,2 அதிகாலை 5:30 மணிக்கு சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.