பதிவு செய்த நாள்
18
டிச
2017
11:12
நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லில் உருவான, 18 அடி உயரத்தில், நின்ற நிலையில், சுவாமி அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம், மூலம் நட்சத்திரத்தில், அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும். இதன்படி, நேற்று நடந்த விழாவில், அதிகாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை சாத்தப்பட்டு, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மார்கழி முதல் ஞாயிறை முன்னிட்டு, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 2:00 மணிக்கு மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, புதிய முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டது. திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், முதன்முறையாக, 3 டன் எடையுள்ள பூக்கள், பழங்கள், கரும்பு, தென்னங்குருத்து மூலம், கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கல்லுக்குழி : திருச்சி, ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, கல்லுக்குழி பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அனுமன் ஜெயந்தியான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.காலை, 7:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடை மாலையும், 10 ஆயிரத்து, எட்டு ஜாங்கிரி மாலையும் சாற்றி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.