பதிவு செய்த நாள்
16
ஜன
2018
11:01
திருவள்ளூர்;திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று நடந்த கருட சேவை நிகழ்ச்சியில், பெருமாள் கருட வாகனத்தில் வீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் உற்சவரை வணங்கி வழிபட்டனர். நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவத்தின், 10 நாட்களும், காலை, மாலை இரு வேளையிலும், வாகனங்களில் உற்சவர் வலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று நடந்தது. அதிகாலை, கோபுர தரிசனமும், தொடர்ந்து வீதி புறப்பாடும் நடந்தது. காலை, 10:00 மணியளவில் ஈக்காடு கல்யாண வீரராகவர் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழி நடை உபயம் கண்ட பெருமாளை வழி நெடுக பக்தர்கள் வணங்கினர். பின், மதியம் கோவிலுக்கு திரும்பினார். இரவு, ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று, தை அமாவாசையை முன்னிட்டு உற்சவர் ரத்னாங்கி சேவை கண்ணாடி அறையில், காலை, 5:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு, சேஷ வாகனத்திலும், இரவு சந்திரபிரபையிலும் உற்சவர் வீதி வலம் வருவார்.