பதிவு செய்த நாள்
22
ஜன
2018
01:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கந்தசஷ்டி குழுவினரின், 38ம் ஆண்டு பழநிக்கு பாதயாத்திரையை முன்னிட்டு, நேற்று சிவலோகநாதர் கோவில் முருகனுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் செய்து வழிபட்டனர்.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கந்தசஷ்டி குழுவினர் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் மாலை அணிந்து வேலாயுதசுவாமியை வழிபட்டு, தைப்பூசத்தன்று பழநி பாலதண்டாயுதபானியை வழிபட்டு வருவது வழக்கமாகும். அதன்படி, 38ம் ஆண்டு பாதயாத்திரையை முன்னிட்டு, கந்த சஷ்டி குழுவினர் மார்கழி மாதம் முதல் மாலை அணிந்து விரதமிருந்து வேலாயுதசுவாமியை வழிபட்டு வந்தனர்.
கடந்த ஜன., 6ம் தேதியன்று, இக்குழுவினர் சார்பில் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் கணபதி பூஜை மற்றும் அபிேஷக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின், நேற்று சிவலோகநாதர் கோவில் முருகனுக்கு, சிறப்பு உச்சிகால பூஜை செய்தனர். முன்னதாக சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதில் வைக்கப்பட்ட கலச நீரை முருகனுக்கு ஊற்றி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்திருந்து முருகனை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.