பதிவு செய்த நாள்
23
ஜன
2018
11:01
திருத்தணி : திருத்தணி, முருகப்பெருமான், அகூர் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், காலை, 8:30 மணிக்கு, மலைப்படிகள் வழியாக...மேல் திருத்தணிக்கு வந்து, அங்கிருந்து, மாட்டு வண்டியில், மேல்திருத்தணி, கசவராஜபேட்டை, முருகூர் வழியாக அகூர் கிராமத்திற்கு, மாலை, 3:00 மணிக்கு சென்று அடைந்தார்.அங்குள்ள, ஈஸ்வரன் கோவிலில், உற்சவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அகூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் மேளம் முழங்க, முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதியுலா வருவதையொட்டி, அகூர் கிராம பெண்கள், தங்களது வீடுகள் முன், வண்ணகோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து வழிப்பட்டனர். இரவு, 11:30 மணிக்கு, மலைக் கோவிலுக்கு உற்சவ பெருமான் புறப்பட்டு சென்றார்.